Published : 29 Feb 2024 03:57 PM
Last Updated : 29 Feb 2024 03:57 PM

ஓசூர் காசிவிஸ்வநாதர் கோயிலின் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஓசூர் காசிவிஸ்வநாதர் கோயிலின் நில ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது.இந்த கோயிலுக்குச் சொந்தமான பல நிலங்கள் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக உள்ளன. அதில் ஜுஜுவாடி கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் நிலங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் தரப்பில், காசிவிஸ்வநாதர் கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனுக்களின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக காசிவிஸ்வநாதர் கோயில் நிலத்துக்கு சிலர் சட்டவிரோதமாக பட்டா பெற்றுள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கோயில் நிலத்தை சொந்தமாக்க தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டவிரோத பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓசூர் ஜுஜுவாடி காசிவிஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமான நில அக்கிரமிப்புகள் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி, காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x