Published : 29 Feb 2024 11:16 AM
Last Updated : 29 Feb 2024 11:16 AM
சென்னை: 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். உயர்கல்வியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நாளை மார்ச் 1 ஆம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் வாழ்க்கையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன. அதற்குக் காரணம் மருத்துவம் தவிர்த்த மற்ற படிப்புகளில் சேருவதற்கான தகுதியை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தான் உருவாக்குகின்றன. அவ்வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒவ்வொரு பாடத்தாள்களுக்கும் இடையே போதிய கால இடைவெளி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கால இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு அனைத்துத் தேர்வுகளையும் மாணவர்கள் சிறப்பாக எழுத வேண்டும்; அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும்.
பொதுத்தேர்வுகளில் வெற்றி பெறவும் சாதனை படைக்கவும், படிப்பதை விட, தேர்வுகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். தேர்வின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் முதன்மையானது பதற்றத்தைக் குறைப்பதாகும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளையும் அச்சமின்றி மாணவர்கள் எழுத வேண்டும்.
அதேநேரத்தில் மாணவர்களின் படிப்புக்கு பெற்றோர்கள் அனைத்து வகையிலும் உதவியாக திகழ வேண்டும். மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக கருதி அவர்கள் மீது அழுத்தத்தை திணிக்காமல், அவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் மட்டுமின்றி, அவர்களுக்குத் தெரிந்த அனைவரும் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி ஊக்குவிக்க வேண்டும்.
12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; உயர்கல்வியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அவற்றின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவும், எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று கூறி, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment