Published : 25 Feb 2024 01:02 PM
Last Updated : 25 Feb 2024 01:02 PM

மார்ச் 1-ல் சென்னையில் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - அதிமுக அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ``தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்’’ வருகின்ற மார்ச் 1ம் தேதி - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள “ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில்” (எழும்பூர் ரயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது.

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, அதிமுக ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களையும்; திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும்; திமுக அரசு மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும் பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x