Published : 23 Feb 2024 05:27 AM
Last Updated : 23 Feb 2024 05:27 AM

கருணாநிதி நினைவிடம் பிப்.26-ல் திறப்பு: அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கு முதல்வர் அழைப்பு

கோப்புப்படம்

சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் பிப்ரவரி 26-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக உறுப்பினர் நா.எழிலன், ‘‘வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணி எப்போது முடிவடையும்?’’ என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: அதிமுகஆட்சியில் 10 ஆண்டுகள் பாழ்பட்டு கிடந்த நிலையில், திமுகஆட்சி பொறுப்பேற்றதும், வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அந்த வகையில், ரூ.80 கோடியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், கூட்டஅரங்கை பொதுவான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, கலையரங்கம், குறள்மாட கூரை, தரை புதுப்பித்தல், தூண்கள், நுழைவுவாயில் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, வரும் 2025ஜூன் மாதம் பணிகளை முடிக்கவேண்டும். இருப்பினும் முன்கூட்டியே பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வரால் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து, எழிலன், ‘‘கருணாநிதி நினைவிடம் எப்போது திறக்கப்படும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. கருணாநிதி நினைவிடம் மட்டுமல்ல, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் பிப்ரவரி 26-ம் தேதி இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன.

இதை விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அதனால், அழைப்பிதழ் அச்சிடவில்லை. அவையில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமை கட்சி என அனைத்து கட்சி உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். அதில் பங்கேற்குமாறு தமிழக மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x