Published : 20 Feb 2024 06:59 AM
Last Updated : 20 Feb 2024 06:59 AM

பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்: அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

அமைச்சர் பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முன்னதாக, திமுகவின் தேர்தல் அறிக்கையில், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்று முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோதே, முதல்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, 2022, 2023-ம் ஆண்டுகளிலும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேளாண் துறைக்கான 4-வது பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்கிறார்.

வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் மட்டுமின்றி, கூட்டுறவு, உணவுத்துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 2024-25ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு ஆகியவை நிறைவேற்றப்படும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x