Published : 18 Feb 2024 12:40 PM
Last Updated : 18 Feb 2024 12:40 PM

ஜெயலலிதா பிறந்தநாள் | 'மக்கள் மனம் குளிர நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக' - அதிமுக

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி, வரும் பிப்.24-ம் தேதியன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும், அன்றைய தினம், மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு அக்கட்சியின் தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுகவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கட்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, ``தனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை; தனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; தான் வாழ்வதே இந்த இயக்கத்துக்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்’’ என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று வீரமுழக்கமிட்டு அரும்பணியாற்றியவர்.

இத்தகைய போற்றுதலுக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளான 24.2.2024 – சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, அவரது உருவச் சிலைக்கு, அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ``நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள 76-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கட்சித் தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும்; இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்’’ என்றும்; ``எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கட்சிக் கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கட்சித் தொண்டர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி, அவரது பிறந்த நாளான 24.2.2024 அன்று, அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும்; தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே அவரது உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.2.2024 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x