Published : 18 Feb 2024 04:18 AM
Last Updated : 18 Feb 2024 04:18 AM

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதுடெல்லியில் நேற்று இரவு வெளியிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கியத் தலைவராக விளங்கியவர் செல்வப்பெருந்தகை. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விசிகவிலிருந்து விலகினார். அதன் பிறகு 2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். எனினும் அங்கும் அவரால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து 2010-ம்ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டசெல்வபெருந்தகை, 2011-ம்ஆண்டு செங்கம் சட்டப்பேரவை தொகுதியிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது பெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பணியை கட்சித் தலைமை வெகுவாகப் பாராட்டுகிறது

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரை நியமனம் செய்வதற்கும் அகில இந்திய தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி, 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

முதல்வர் வாழ்த்து: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 முதல் தமிழக காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்த கே.எஸ்.அழகிரியின் எதிர்கால பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x