Last Updated : 14 Feb, 2024 08:18 PM

 

Published : 14 Feb 2024 08:18 PM
Last Updated : 14 Feb 2024 08:18 PM

வீராணம் ஏரியின் நீர் மட்டம் சரிந்தது: சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படுறதா?

தண்ணீர் அளவு குறைந்து காணப்படும் வீராணம் ஏரி

கடலூர்: வீராணம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும்.

ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு தண்ணீர் வரும். ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசனம் பொறுகிறது. தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயிலாலும், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டதாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

இன்றைய (பிப்.14) நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடி உள்ளது. சென்னைக்கு வினாடிக்கு 48 கன அடியும், பாசனத்துக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல தண்ணீர் திறந்தால் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியின் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தும் நிலை ஏற்படும். ஏரிக்கு தண்ணீர் வரும் 9 அடி உள்ள கீழணையில் 2.7 அடி குறைந்த அளவே தண்ணீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x