Published : 14 Feb 2024 03:14 PM
Last Updated : 14 Feb 2024 03:14 PM

பொன்முடிக்கு எதிரான வழக்கு: விசாரணை தேதிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களின் விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை என்பதற்கு பதிலாக மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை என மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

இதனிடையே, இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான இந்த 4 வழக்குகள் பிப்ரவரி 27, 28, 29 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13-ம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22-ம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, பொன்முடி மீதான வழக்கை பிப்ரவரி 19 முதல் 22-ம் தேதி வரை விசாரிப்பதற்கு பதிலாக, மார்ச் 12 தேதி முதல் 15ம் தேதி வரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை தேதிகளை மாற்றி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x