Published : 11 Feb 2024 06:44 AM
Last Updated : 11 Feb 2024 06:44 AM

2040-ல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார்: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் நம்பிக்கை

உதகை தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ‘விண்வெளியில் இந்தியா’ என்ற கருத்தரங்கை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்.

உதகை: 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாசார்பில் மனிதனை நிலவுக்குஅனுப்பும் பணி நிறைவேற்றப்படும். 2040-ல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என சந்திரயான்-3 திட்டஇயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘விண்வெளியில் இந்தியா’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு விண்வெளி குறித்தும், சந்திரயான் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், விண்வெளி மற்றும் சந்திரயான் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வுமையம் (இஸ்ரோ) சார்பில் ரிமோட்சென்சிங், தகவல் தொடர்பு, வானிலை, ஜிபிஆர்எஸ், வழிகாட்டி, கடலியல் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. மேலும்,செவ்வாய் கிரகம், சூரியன் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

மேலும், அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியா சார்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். 2040-ல் நிலவில் இந்தியர் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

சந்திரயான்-3 செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர்அடங்கியது. இதன் ஆயுட்காலம்ஒரு லூனார் நாளாகும். அதன்ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்துக்காக விண்ணில்செலுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறிஉள்ளது.

இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு வீரமுத்துவேல் கூறினார்.

கருத்தரங்கில் நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x