Published : 09 Feb 2024 05:04 AM
Last Updated : 09 Feb 2024 05:04 AM

சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக வழக்கு: ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: கடந்த 2022 அக்டோபரில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என கிறிஸ்துவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, என கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய் தகவலை பரப்பியுள்ள அண்ணாமலைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இந்த வழக்கில் நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரியும், விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்யக்கோரியும் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இதுதொடர்பான தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக அண்ணாமலை தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் சட்டத்துக்குட்பட்டு விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ``யூடியூப் சேனலுக்கு அண்ணாமலை 44:25 நிமிடங்கள் பேட்டியளித்துள்ளார். அதில் தீபாவளி தொடர்பான 6:50 நிமிடங்கள் கொண்ட அந்தப் பகுதியை மட்டும் எடுத்து அவரது கட்சியின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக பகிர்ந்துள்ளனர். இந்த பேட்டியின் மூலம் இந்து கலாச்சாரத்துக்கு எதிராக கிறிஸ்துவ மிஷினரி அமைப்புகள் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் அவருக்கு இருந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு சட்டம் நன்றாக தெரியும்.கட்சியின் மாநிலத் தலைவராக, மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளஇவரது கருத்துகள் இந்து மதத்தினர்மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தைஏற்படுத்தும். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திடீரென மத ரீதியிலான பதற்றத்தை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அண்ணாமலையின் பேச்சு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கும் முகாந்திரம் உள்ளது.

பேட்டியளித்து 400 நாட்கள் கடந்த பிறகு, இந்த பேட்டியால் சமுதாயத்தில் வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிற அண்ணாமலை தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. எக்ஸ் வலைதளப்பதிவுகள் நிரந்தரமாக உள்ளதால் இதுபோன்ற பேச்சுகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் வெடிகுண்டைப் போன்றது. புகார்தாரரான பியூஷ் மானுஷின் புகாரை தெளிவாக ஆராய்ந்த பிறகே சேலம்குற்றவியல் நடுவர் இந்த வழக்கைவிசாரணைக்கு எடுத்துள்ளார்.

எனவே இந்த வழக்கை ரத்துசெய்யமுடியாது எனக்கூறி அண்ணாமலையின் மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x