Last Updated : 23 Feb, 2018 09:27 PM

 

Published : 23 Feb 2018 09:27 PM
Last Updated : 23 Feb 2018 09:27 PM

புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்துக்கு மோடி வர திடீர் எதிர்ப்பு

புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்வதாக ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரி ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பிஹாரிலிருந்து பிரிந்த ஜார்கண்ட் பொகாரா பகுதியைச் சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத் ஆகியோர் தங்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஹேமலதா பிரசாத்தின் மீது ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

மேலும் 5 சகோதரிகளும் சேர்ந்து ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே குருசுக்குப்பத்தில் உள்ள ஆசிரம விடுதியில் இருந்து 5 சகோதரிகளையும் வெளியேற்ற ஆசிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தற்கொலை முயற்சியில் இறங்கினர். அதைத்தொடர்ந்து 5 சகோதரிகளும் அவர்களது தந்தை பிரசாத், தாய் சாந்திதேவியுடன் 2014 டிசம்பரில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 18-12-2014 அதிகாலை 4 மணிக்கு சகோதரிகள் ஹேமலதா, அருணாஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ராஜ்யஸ்ரீ தங்களின் பெற்றோர் பிரசாத், சாந்திதேவியுடன் கூட்டாக காலாப்பட்டுக்கு பஸ்ஸில் சென்றனர்.

பின்னர் காலாப்பட்டிலுள்ள கடலுக்கு அவர்கள் சென்றனர். சகோதரிகள் 5 பேரும், அவரது தாயாரும் கடலில் குதித்துள்ளனர். ஆனால், அவரது தந்தை பிரசாத் அலறத் தொடங்கியுள்ளார். இச்சம்பவத்தில் அருணஸ்ரீ (52), ராஜ்யஸ்ரீ (48), தாயார் சாந்திதேவி (78) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த ஏனைய சகோதரிகளான நிவேதிதா, ஹேமலதா, ஜெயஸ்ரீ, தந்தை பிரசாத் ஆகியோரை மீனவர்கள் மீட்டனர்.

தற்போது புதுச்சேரியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தற்பொழுது வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் இறப்புக்கு காரணமான அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பெயரில் காவல் துறை இதுவரை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தங்கும் இடம் உணவு உள்ளிட்டவை ஆசிரம நிர்வாகம் இதுவரை வழங்காததை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹேமலதா கூறுகையில், "இதுவரை அரசும், அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி ஆசிரமம் வந்து பார்வையிட உள்ளார். இதை எதிர்க்கிறோம். பல்வேறு புகார்கள் ஆசிரம நிர்வாகிகள் மீது உள்ள நிலையில் பிரதமர் அங்கு வந்து பார்வையிட்டால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.பிரதமர் ஆசிரமம் வரக்கூடாது.எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். பிரதமர் வந்து பார்வையிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x