Published : 02 Feb 2024 04:02 AM
Last Updated : 02 Feb 2024 04:02 AM

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் மழை

தூத்துக்குடி / கோவில்பட்டி / திருநெல்வேலி / நாகர்கோவில்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் நேற்று மிதமான மழை பதிவாகியுள்ளது.

இரு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணிக்கு பதிவான மழையளவு ( மி.மீட்டரில் ): பாளையங்கோட்டை- 20, திருநெல்வேலி - 7.40, கருப்பாநதி - 24.50, அடவிநயினார், சிவகிரி - தலா 1, தென்காசி - 4.20, கடையநல்லூர் - 27, சங்கரன்கோவில் - 5. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 135.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 273 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 804 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.48 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 132 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 465 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 20.30 அடியாக இருந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 78.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் 95 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி நீர்மட்டம் 79.25 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் வந்தது. 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் தூத்துக்குடி பகுதியில் தொடங்கப்பட்ட உப்பு உற்பத்திக்கான பணிகள் நிறுத்தப்பட்டன. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்ட தால் குளிர்ச்சி நிலவியது.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் லேசான தூறல் விழுந்தது. காலை 8.15 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. 8.45 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது. காலை 11.30 மணி வரை மழை தொடர்ந்தது. மாணவ, மாணவிகள் மழையில் நனைந்த வாறு பள்ளிகளுக்கு சென்றனர். மேலும், கோவில்பட்டி நகரச் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இளையரசனேந்தல் சாலை, கிருஷ்ணா நகர், லட்சுமி மில் ரயில்வே கேட் அருகே உள்ள சுரங்கப்பாதைகளில் சிறிதளவு தண்ணீர் தேங்கியது.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பகல் 11 மணியளவில் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுங்கான்கடை, பேயன்குழி, குலசேகரம், பேச்சிப் பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 18 மி.மீ., மழை பெய்தது. பேச்சிப் பாறை, புத்தன் அமையில் தலா 14 மி.மீ., சிற்றாறு ஒன்றில் 10 மி.மீ., மழை பதிவானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x