Published : 31 Jan 2024 05:09 AM
Last Updated : 31 Jan 2024 05:09 AM

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று தொடக்கம் - கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை தீர்ப்பார்கள்

கோப்புப்படம்

சென்னை: அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதியதிட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதியதிட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டுநவம்பர் 23-ம் தேதி அறிவித்தார். இத்திட்டம் ஜனவரி 31-ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், மாதம்தோறும் 4-வது புதன்கிழமை மாவட்டஆட்சியர் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும். முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், ஆட்சியரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட அளவிலான இதர உயர் அதிகாரிகள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணிவரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி,பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். ஆய்வின்போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக ஆட்சியர்கள் உரிய தீர்வு காண்பார்கள். அன்றைய தினம், மக்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற ஏதுவாக நடத்தப்படும் இந்த முகாமை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல, பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை துறை அலுவலர்கள் கனிவோடு பரிசீலித்து, தாமதம் இன்றி அவற்றை நிறைவேற்ற வழிவகை காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று காலை முதல் மாலைவரை ஆலோசனை நடத்தியதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x