Published : 31 Jan 2024 04:10 AM
Last Updated : 31 Jan 2024 04:10 AM

இண்டியா கூட்டணியில் கடைசியில் திமுக மட்டுமே இருக்கும்: டிடிவி.தினகரன் கருத்து

டிடிவி.தினகரன்

புதுக்கோட்டை: இண்டியா கூட்டணியில் கடைசியில் திமுக மட்டுமே இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஊழல், முறைகேடுகளுக்கு பெயரெடுத்த ஆட்சியை பழனிசாமி நடத்தியதால் தான் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக ஆளுநரின் புண்ணியத்தால் அவர்கள் சிறை செல்லாமல் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் மீது இருந்த அதிருப்தி, கோபத்தில் தான், ஆட்சி அதிகாரத்தை மக்கள் திமுகவுக்கு கொடுத்தார்கள்.

ஆனால், அவர்களை விட திமுகவினர் மோசமாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆளும் திமுகவுக்கும், ஆண்ட அதிமுகவுக்கும் மாற்று சக்தியாக அமமுக இருக்கும் என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். இண்டியா கூட்டணி என்பது தேர்தல் முரண்பாடு உள்ள கூட்டணி. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அது உடைந்து விடும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. கடைசியில் அந்த கூட்டணியில் திமுக மட்டுமே இருக்கும். ஆளுநரின் செயல்பாடுகள் ஆளுநர் பதவிக்கே இழுக்காக உள்ளது.

அதை தவிர்த்து ஆளுநர், அவரது பதவிக்கு ஏற்றார்போல செயல்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யவில்லை. ஆனால், என்னை பொறுத்தவரை இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பதுதான் எனது விருப்பம். ஆனால், நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்துவதால், பரிசீலிக்கிறேன் என்று கூறியுள்ளேன். இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x