Published : 21 Jan 2024 07:42 AM
Last Updated : 21 Jan 2024 07:42 AM

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின்னர் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தகவல்

ஜி.கே.வாசன் | கோப்புப்படம்

சென்னை: நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின்னர், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமாகா மாநில இளைஞரணியின் 15-வது செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, பொதுச் செயலாளர்கள் நாதன், ரகு நந்தகுமார், ஜவஹர்பாபு, முனைவர் பாட்ஷா, துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த தங்களதுகருத்துகளை முன்வைத்தனர். மேலும், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களையும் கருத்தில்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அயோத்தி ராமர் கோயில் பிராணபிரதிஷ்டை விழாவுக்கு செயற்குழுக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவருக்கு வழங்குதல், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அதை முழுமையாக ஏற்று, தேர்தல் பணியாற்றுதல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின்னர், கட்சியின் செயற்குழு, மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோரது கருத்துகளைக் கேட்டறிந்து, மக்களவை தேர்தல் கூட்டணிகுறித்து முடிவு செய்யப்படும்.

தமாகாவின் பலம் வெறும் வாக்கு வங்கி மட்டுமல்ல. மரியாதை என்ற பலமும் எங்களிடம் உள்ளது.எனவே, எந்தக் கூட்டணி அமைந்தாலும், அதன் வெற்றிக்கு தமாகாவின் பலம் முக்கியமானது. கேலோஇந்தியா விளையாட்டுப் போட்டிதொடக்க விழாவுக்கு வருகைதந்து, பிரதமர் மோடி தமிழக விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். பிரதமரின் வருகை தமிழகத்துக்கு நன்மை பயக்கும். இவ்வாறு வாசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x