Published : 30 Aug 2014 09:08 AM
Last Updated : 30 Aug 2014 09:08 AM

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சென்னை விமான நிலையத்துக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு கடந்த 25-ம் தேதி காலை 10.45 மணிக்கு தொலைபேசியில் பேசிய நபர், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 10 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவியுள்ளனர். அவர்கள் சென்னை விமான நிலையம் உட்பட 10 இடங்களை தகர்க்க உள்ளனர் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். அன்று மாலை 4.30 மணிக்கு அதே நபர் மீண்டும் இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். அதன்பின் கடந்த 27-ம் தேதி காலை 10.15 மணிக்கு அதே நபர் மீண்டும் இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பாகிஸ்தானில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் சென்னையில் ஊடுருவியுள்ளனர். அவர்கள் சென்னை விமான நிலையம் உட்பட பல இடங்களை குண்டு வைத்து தகர்க்க உள்ளனர் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

விமான நிலைய இயக்குநர் கொடுத்த புகாரின்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் நாகப்பட்டினம் திட்டச்சேரியில் இருந்து பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் முகமது ரகீம் (27) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x