Published : 13 Jan 2024 03:48 PM
Last Updated : 13 Jan 2024 03:48 PM

2024 இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: "2024ம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் டெபிட் கார்டு மற்றும் கிரிடிட் கார்டு மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் 260 திருக்கோயில்களுக்கு 315 பிஓஎஸ் கருவிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்து சமய அறநிலையத் துறையில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்தி பல்வேறு வசதிகளை பக்தர்களின் தேவைகளுக்காகவும் திருக்கோயில்களின் வரவு செலவுகள் சரியான முறையில் பராமரிப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

கடந்தாண்டு 550 திருக்கோயில்களுக்கு 1,700 கையடக்க கட்டணக் கருவிகளை வழங்கினோம். அதன்மூலம் ரூ.210 கோடி கட்டணங்களாக கிடைக்கப்பெற்றுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக இருப்பதால் அதனை விரிவுப்படுத்திடும் வகையில் தற்போது 260 திருக்கோயில்களுக்கு 315 கையடக்க கட்டணக் கருவிகள் வழங்கியுள்ளோம். இதன்மூலம் திருக்கோயில்களில் கட்டணச் சீட்டு பெறுவதற்கும் நன்கொடைகள் வழங்குவதற்கும் பக்தர்களுக்கு சுலபமாக இருக்கும். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.

மன்னர்களாலும், மூதாதையர்களாலும் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோயில்களாக 717 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாத்து புனரமைக்க அரசு மானியமாக ரூ.200 கோடியும், உபயதாரர்கள் ரூ.130 கோடியும் வழங்கி இருக்கின்றார்கள். இதன்மூலம் 100 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டில் 80 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணிகளும், நிலங்களை அளவீடு செய்து காக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ.5,558 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருப்பதோடு, 1.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

முருகன் கோயில்களில் தைப்பூச விழாவினை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு நடத்திட இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு இலகுவாகவும், விரைவாகவும் தரிசனம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்படும்.

அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வருகின்ற ஜனவரி 28ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கின்றது. 60 வயது முதல் 70 வயது வரையிலான 1,000 பக்தர்கள் 5 குழுக்களாக அழைத்து செல்லப்பட உள்ளனர். முதல் குழுவில் 200 பக்தர்களோடு இணை ஆணையர் ஒருவரும், மருத்துவ குழுவினரும் செல்வார்கள். இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் இந்தாண்டு 300 நபர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக அரசு ரூ.75 லட்சம் மானியமாக வழங்கி உள்ளது. முதல் குழுவில் 60 நபர்கள் பிப்ரவரி 1-ம் தேதி புறப்படுகின்றனர். இதுபோன்ற பல்வேறு புதிய திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுடைய சேவைக்காகவும், இறை தரிசனத்திற்காகவும் தொடர்ந்து செய்து வருகிறது.

தவறு எங்கு நடந்திருந்தாலும் எந்த காலத்தில் நடந்திருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் நகைகள் தொடர்பாக தணிக்கை அலுவலர்கள் தெரிவித்த தவறுகள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நடந்த தவறுகள் இல்லை என்றிருந்தாலும் அதன்மீது உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க திருக்கோயில் இணை ஆணையருக்கும், மண்டல இணை ஆணையருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பெற்றவுடன் தவறு யார் செய்திருந்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் தயங்காது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x