Published : 11 Jan 2024 04:00 AM
Last Updated : 11 Jan 2024 04:00 AM

டெல்டாவில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: ”காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 6, 7, 8 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி வட்டங்களில் பல்வேறு கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்தநெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து விட்டன.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம், கொரடாச்சேரி, நீடாமங்கலம், திருத்துறைப் பூண்டி ஆகிய ஒன்றியங்களில் பல கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், குறுவை அறுவடை முடிந்து சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, எள், நிலக்கடலை பயிர்கள் தொடர் மழையில் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை விடுபடாமல் முழுமையாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்துள்ள பயிர்களுக்கான இழப்பீட்டை இந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலத்துடன் மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x