Published : 04 Jan 2024 04:23 AM
Last Updated : 04 Jan 2024 04:23 AM

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சு தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பாக, தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தங்களையும் அழைக்க கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள். படங்கள்: ம.பிரபு

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஜன.9-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.

இதுதொடர்பான 2-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்கள் தரப்பில்அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடிம.இராசு, ஆர்.ஆறுமுகம், டி.திருமலைசாமி, பாலன், கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் தலைமை வகித்தார். சுமார் 4 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இதற்கிடையே, ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர். 2 மணிநேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.

இதில் நிர்வாகங்கள் தரப்பில், "கோரிக்கைகள் தொடர்பாகபொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்துஓரிரு நாட்களில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசும் அறிவுறுத்தியுள்ளது. ஓய்வூதியர் பிரச்சினை என்பது நீண்டகாலப் பிரச்சினை. இதனை தீர்க்க அவகாசம் தேவைப்படுகிறது" என்றனர்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தொழிற்சங்கங்கள், "8 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கு தீர்வு காண மேலும் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இப்பிரச்சினையில் தெளிவாக முடிவெடுக்க முடியாத பட்சத்தில் வேலைநிறுத்தத்தை நோக்கிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என தெரிவித்தன.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதி நடைபெறும் எனதொழிலாளர் தனி இணை ஆணையர் அறிவித்தபோதும், அதை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன.

பின்னர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன் கூறும்போது, "பொங்கலுக்கு முன் ஓய்வூதியர் பிரச்சினைக்காவது தீர்வுகாண வேண்டும் என்றபோதும் நியாயமான பதில் கிடைக்கவில்லை. எனவே, வரும் 9-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது எனமுடிவு செய்துள்ளோம். அதிமுகவின் தொழிற்சங்கப் பேரவை தலைமையிலான கூட்டமைப்பு மற்றும் சிஐடியு உள்ளடங்கிய கூட்டமைப்பு இணைந்து வேலைநிறுத்தத்தை நடத்த இருக்கிறோம். தொமுச தொழிலாளர்கள் உட்பட அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்" என்றார்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர்.கமலகண்ணன் கூறும்போது, "கோரிக்கைகள் ஒன்று என்ற அடிப்படையில் தொமுசவை தவிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.

முன்னதாக சென்னை, பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x