Published : 02 Jan 2024 02:49 PM
Last Updated : 02 Jan 2024 02:49 PM

தமிழகத்தில் 30+ கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித் துறை சோதனை

சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் கட்டுமான நிறுவனங்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தமிழகத்தில் பல இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஷெனாய் நகரில் உள்ள சிஎம்கே நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டியது இந்த நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. பல முக்கிய கட்டிடங்களை கட்டிய இந்த நிறுவனம், வரி ஏய்ப்பு செய்த புகாரின் காரணமாக ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது.

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ஈரோடு, கோவை, நாமக்கல் போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் அதிகாரிகள் பாதுகாப்பு உடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x