Last Updated : 02 Jan, 2024 11:21 AM

2  

Published : 02 Jan 2024 11:21 AM
Last Updated : 02 Jan 2024 11:21 AM

திருச்சி விமான நிலையத்தின் ரூ.1112 கோடி புதிய முனையம் - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாகயும், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் முதலிடத்திலும் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் 702 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2009 ஜூன் 1 முதல் பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த முனையம் மூலம் ஆண்டுக்கு 0.49 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாள முடியும்.

நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்துறை வளர்ச்சியில், திருச்சி விமான நிலையம் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி, திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வெளிநாட்டு பயணத்துக்கான வழித்தடமாகவும் உள்ளது.

தற்போது, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நாள்தோறும் இயக்கப்படும் 10 வெளிநாட்டு சேவை மூலம் 3,479 பேர், 8 உள்நாட்டு விமான சேவையின் மூலம் 1,737 பேர் என நாள்தோறும் 5,216 பயணிகள் கையாளப்படுகின்றனர். வருங்காலங்களில் விமான சேவைகள் அதிகரிக்கும் நிலையில், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

இதேபோல, கரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியை சந்தித்த கார்கோ சேவையும், தற்போது, அசுர வளர்ச்சி கண்டு சாதனைப் படைத்து வருகிறது. கரோனா பரவல் 2020-21-ல் 2,740 டன், 2021-22 5217 டன், நடப்பாண்டில், 6,857 டன் என 3 மடங்காக அதிகரித்து வருகிறது. இங்கு, மத்திய நிதியமைச்சகம் சர்வதேச கூரியர் சரக்கு இயக்கத்துக்கு 2013-ம் ஆண்டில் அனுமதி அளித்தும், இதுவரை விமானநிலைய ஆணையக் குழுமம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. மேலும் உள்நாட்டு விமான சேவைக்கு திருச்சி விமானநிலையம் சிறப்பிடம் பெற்று வரும் நிலையில், உள்ளூர் கார்கோ சேவைக்கும் அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை என விமானநிலைய ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விமான நிலைய வளர்ச்சிக்கு தேவையான ரன்வே விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்துதல் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் கூடுதல் அகலம் கொண்ட நீண்ட இறக்கைகள் மற்றும் அதிக இருக்கைகள் கொண்ட உயர் ரக விமானங்களை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற விமான நிலையங்களைக் காட்டிலும், பயணிகள் மற்றும் சரக்குகள் கையாள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மறுபுறம், திருச்சி விமான நிலைய வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்ட ஒருங்கிணைந்த புதிய முனையம் திறப்பதும், பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்படுவதும் திருச்சி சர்வதேச விமானநிலைய வளர்ச்சிக்கு காலத்தின் கட்டயம் என விமானநிலைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விமானநிலைய ஆய்வாளர் உபைதுல்லா கூறுகையில், “ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தைக் காட்டிலும். அதிநவீன வசதிகளுடன் மூன்று மடங்கு கூடுதல் பயணிகள் கையாளும் திறன் இருப்பதால் ஒரே சமயத்தில் 4,000 சர்வதேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.

பயணிகள் காத்திருப்பை தவிர்த்திடும் வகையில், புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்றப் பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் தற்போது, கையாளப்படும் 1.5 மில்லியன் பயணிகளைக் காட்டிலும், 2040-ல் மும்மடங்காக ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளை கையாள முடியும். எனவே 2040-ல் திருச்சி சர்வதேச விமான நிலையம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x