Published : 29 Dec 2023 03:20 PM
Last Updated : 29 Dec 2023 03:20 PM

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், செயல்பாடு, பராமரிப்புக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்டத்தின், கட்டம்-1-க்கு சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ISO 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ISO 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுக்கான சான்றிதழை பெற்றுள்ளது என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், திட்டம் கட்டம்-1-க்கு சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ISO 9001 தர மேலாண்மை அமைப்பு மற்றும் ISO 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுக்கான சான்றிதழை பெற்றுள்ளது. இந்த சான்றிதழை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திகிடம் Bureau Veritas நிறுவனத்தின் சார்பாக அதன் மேலாளர் வின்ஸ்டன் ஐசக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) முன்னிலையில் வழங்கினார்.

​இது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பின் 13 துறைகளை உள்ளடக்கியது. மெட்ரோ ரயில் செயல்பாடுகள், மெட்ரோ ரயில், மேல்நிலை உபகரணங்கள், சிக்னலிங், தொலை தொடர்பு, கட்டுமானம், வழித்தடங்கள், மின்சாரம் மற்றும் பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பாதுகாப்பு, தானியங்கி கட்டண சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

​இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஆவணங்கள் மற்றும் தணிக்கை தொடர்பான பயிற்சி அளிக்க ஆலோசகரை ஏற்கெனவே நியமித்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 2361 நபர்களுக்கு ISO விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர்அலுவலர்கள் ISO அமைப்புகள் இணங்குவதை உறுதி செய்வதற்காக உள் தணிக்கையாளர்கள் மற்றும் முன்னணி தணிக்கையாளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.

​இந்த ISO சான்றிதழ், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1 நீல வழித்தடம் மற்றும் பச்சைவழித்தடத்தில் உள்ள உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. ​ISO சான்றளிப்பு அமைப்பான Bureau Veritas, ஆகஸ்ட் 2023 மற்றும் நவம்பர் 2023-இல் தணிக்கை ஆய்வுகளை நடத்தியது மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ISO சான்றளிப்பை அனுமதித்துள்ளது. இந்த ISO சான்றிதழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்த உதவும்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி எச்.ஜெயலக்‌ஷ்மி, தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), கூடுதல்பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் பெ.தியாகராஜன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x