Published : 29 Dec 2023 05:56 AM
Last Updated : 29 Dec 2023 05:56 AM

ரூ.2000 கோடி பேரிடர் நிதி கோரி வழக்கு | தமிழகத்துக்கு பாரபட்சம் பார்க்காமல் மத்திய அரசு உதவ வேண்டும்: ஐகோர்ட் வலியுறுத்தல்

மதுரை: தமிழகத்துக்கு ரூ.2000 கோடி பேரிடர் நிவாரண நிதி கோரிய வழக்கில், மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் என்பவர், உயர் நீதிமன்றக் கிளை யில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. சில பகுதிகளில் ஒரு நாளில் ஓராண்டில் பெய்ய வேண்டியதை காட்டிலும் அதிகளவு மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

இயற்கை பேரிடர் 2016-ம்ஆண்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், மாவட்ட அளவில் கையாளப்படும் பேரிடர்கள், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழுக்கள் கையாள வேண்டிய பேரிடர்கள், மாநில, மத்திய குழு இணைந்து கையாள வேண்டிய பேரிடர்கள் என 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013-ல் ஏற்பட்ட வெள்ளம், 2014-ல் ஆந்திராவில் வீசிய ஹூட் புயல், 2018 கேரள வெள்ளம் ஆகியவை கடுமையான இயற்கை பேரிடர் என அறிவிக்கப்பட்டது.

இதனால் கேரள மாநிலத்துக்கு உடனடியாக ரூ.100 கோடியும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.500 கோடியும் நிதி வழங்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும். 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி, பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதி வழங்க வேண் டும்.

மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக வழங்க, தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு ரூ.1,60,153 கோடி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் போதுமான நிதி இல்லை என்கிறார்கள்.

மத்திய அரசு தமிழகத்துக்கு உடனடியாக ரூ.700 கோடியும், நிவாரண நிதியாக ரூ.2000 கோடியும் ஒதுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, தேசியபேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2000 கோடி நிதி வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

அரசு சமமாக பார்க்க வேண்டும்: இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், மக்கள் அனைவரையும் இந்தியர்களாகவும், குடிமக்களாகவும் சமமாகப் பார்க்க வேண்டும். அனைவரும் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் வாக்களிக்கின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அவர்களிடம் உயிர் மட்டுமே மிஞ்சியுள்ளது. இதனால் பாரபட்சம் பார்க்காமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

மனு தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது என தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x