Published : 29 Dec 2023 04:08 AM
Last Updated : 29 Dec 2023 04:08 AM

தூத்துக்குடியில் கிருமித் தொற்று அபாயம்: குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆட்சியர் லட்சுமிபதி | கோப்புப் படம்

தூத்துக்குடி: தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, பொது மக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் குடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ”தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடிநீர் ஆதாரங்களில் தொற்று நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் குளோரினைக் கலந்து விநியோகிக்கவும், நுகர்வோருக்கு குடிநீர் சென்றடையும் இடத்தில் குடிநீரில் உள்ள குளோரின் அளவைக் கண்காணிக்கவும், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, குளோரின் கலந்த குடிநீர் மட்டுமே பொது மக்களுக்கு உள்ளாட்சிகளால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், குடிநீரேற்று நிலையங்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளிலிருந்து பொது மக்களுக்குச் சென்றடையும் குழாய்களில் உள்ள சிறு சிறு துளைகள் மூலமாகவோ அல்லது பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் இடங்களிலோ குடிநீரில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடிநீர் ஆலைகளைக் கண்காணிக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிநீர் ஆலைகளில் தயார் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரை, ஆலையின் உள் பகுப் பாய்வகம் மற்றும் தேசிய தரச்சான்று பெற்ற பகுப் பாய்வகத்தில் பகுப் பாய்வு செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், கேன்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கும் போதோ அல்லது விநியோகத்தின் போதோ, அக்குடிநீரில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வகைக் குடிநீரையும் நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்த பின்னர் பருக வேண்டும்.

குடிநீரில் குளோரின் கலக்காமல் விநியோகம் செய்யப் பட்டாலோ அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக சந்தேகித்தாலோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்குத் தகவல் வழங்க வேண்டும். பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரின் தரத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உணவு பாதுகாப்புத் துறை, தொலைபேசி எண் 9444042322-க்குதகவல் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x