Published : 29 Dec 2023 06:08 AM
Last Updated : 29 Dec 2023 06:08 AM

போக்குவரத்து சங்கங்களுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தக்க தீர்வு காண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பிற மாநிலங்களை விடசிறப்பான போக்குவரத்து சேவையை தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகின்றன. இவை 23,000 பேருந்துகளையும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்ட பெரிய கட்டமைப்பாகும். கடந்த பல ஆண்டுகளாக, பொருளாதார சிக்கலுக்கு போக்குவரத்து கழகங்கள் ஆட்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற, பணி விலகிய, மரணமடைந்த தொழிலாளர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தொழிலாளர்களின் பணிச் சுமை அதிகரித்துள்ளது.

பேருந்துகளை இயக்க முடியாமல் நிறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிகூட நிர்வாகத்தால் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஓய்வுபெற்றோர், மரணம் அடைந்தோர் ஆகியோரின் பணிக்கொடை ஓய்வு பலன்களைகூட வழங்குவதற்கு பல ஆண்டுகள் தாமதமாகிறது. பொருத்தமான ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் முதிர்ந்த வயதில் தொழிலாளர்கள், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டி நேரிடுகிறது. இப்பிரச்சினைகளை தீர்ப்பது அவசர அவசியமானதாகும்.கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தக்க தீர்வு காண வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x