Published : 28 Dec 2023 05:12 AM
Last Updated : 28 Dec 2023 05:12 AM

ஆன்லைன் உணவு, மளிகை விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு ‘கிக்’ பணியாளர்கள் நலவாரியத்தை தோற்றுவித்தது தமிழக அரசு

சென்னை: இணையம் சார்ந்த உணவு, மளிகைப் பொருட்கள் விநியோகம், வாடகை வாகன சேவைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ‘கிக்’ நலவாரியத்தை தோற்றுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறையுடன் இந்த அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணையசெயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி ‘கிக்’ (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இணையம் வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா ‘கிக்’ தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என்று கடந்த சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, “தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம்” எனும் புதிய நலவாரியத்தை தோற்றுவித்து அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்த வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று,பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x