Published : 27 Dec 2023 06:59 AM
Last Updated : 27 Dec 2023 06:59 AM

பாலியல் வழக்குகளில் முக்கிய கருவியான மரபணு சோதனையை பாதுகாப்பதில் கூடுதல் கவனம்: போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுரை

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, அவரது தாயாருடன் ஒன்றாக வசித்து வந்த சந்திரமோகன் என்பவர், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், மரபணு சோதனை அறிக்கை அடிப்படையில் சந்திரமோகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரமோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் கரு கலைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தக்கரு எப்போது, எங்கு கலைக்கப்பட் டது, அதன் மாதிரிகள் எப்போது சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டது என்பது தொடர்பான எந்த ஆதாரங் களும், சாட்சியங்களும் இல்லை.

இந்தச் சூழலில் சிறுமியின் கலைக்கப்பட்ட கருவிலிருந்து எடுக்கப்பட்ட திசு எனக் கூறி போலீஸார் அளித்தசாட்சியம், அறிக்கையின் அடிப்படை யில் குற்றச்சாட்டு அரசு தரப்பில் சரிவரநிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை கீழமை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை வழங்கியது.

ஆனால் பாலியல் வழக்குகளில் மரபணு சோதனை என்பது காவல்துறையின் விசாரணை, நீதிமன்ற குற்ற விசாரணை நடைமுறைகளில் முக்கிய கருவியாக இருப்பதால் அவற்றின் திசு மாதிரிகளைச் சேகரிப்பது, முறையாக பேக் செய்வது, பாதுகாப்பது போன்றவற்றில் போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கில் அந்த நடைமுறையை போலீஸார் சரியாக பின்பற்றவில்லை என்பதால் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம்’’ எனக் கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x