Published : 26 Dec 2023 09:39 AM
Last Updated : 26 Dec 2023 09:39 AM

19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழகம், புதுச்சேரி கடற்கரைகளில் மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்

கடலூர்: 19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் மீனவர்களும், பொதுமக்களும் கடற்கரைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால், தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடல்நீர் தீவிர வேகத்துடன் பல நூறு மீட்டர் தொலைவுக்கு ஊருக்குள் வந்தது. இதில், கடற்கரையோரம் வசித்து வந்த மீனவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் உயிரிழந்தனர். மீனவர்களின் படகுகளும், வீடுகளும் கடுமையாக சேதமடைந்தன.

இந்த துயர சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அது ஆறாத வடுவாகவே உள்ளது. இந்த துயரச் சம்பவத்தை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டும், பல மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்டத்தில் சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குழுவாக கடற்கரைக்கு வந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x