Published : 18 Dec 2023 03:17 PM
Last Updated : 18 Dec 2023 03:17 PM

“சென்னை மழை அனுபவம் மூலம் தென்மாவட்ட மக்களைக் காப்போம்” - ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட நிகழ்வில் ஸ்டாலின் உறுதி

சென்னை: “இரண்டு நாட்களாக, தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைக்கும், இன்று காலையில் இங்கே வருகிறவரைக்கும், அதிகாரிகள், அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் செயல்பட்டதைப்போல, அந்த அனுபவங்களைக் கொண்டு, இன்னும் சிறப்பாக செயல்பட்டு, தென் மாவட்ட மக்களை காப்போம் இது உறுதி" என்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 4-ஆம் தேதி புயலோடு கூடிய பெருமழை பெய்தது. 47 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. அதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், மழைக்குப் பிறகு போர்க்கால அடிப்படையிலும் செயல்பட்டு அரசு எதிர்கொண்டது. கடுமையான மழை ஒருநாள் முழுவதும் பெய்தது. மழை நின்றவுடன், நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். மறுநாள் காலையில், முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிக்கு மின்னிணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்தது.

புறநகர் பகுதிகளில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக, நான்கைந்து நாட்களில் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அந்த மாவட்டத்தின் மக்களுக்கு 6000 ரூபாய் இழப்பீடு அறிவித்து நேற்று நானே தொடங்கி வைத்தேன். இதற்கிடையில், இரண்டு நாட்களாக, தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைக்கும், இன்று காலையில் இங்கே வருகிறவரைக்கும், அதிகாரிகள், அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சென்னையில் செயல்பட்டதைப்போல, அந்த அனுபவங்களைக் கொண்டு, இன்னும் சிறப்பாக செயல்பட்டு, தென் மாவட்ட மக்களை காப்போம் இது உறுதி.

மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை,ஆகிய இந்த 13 அரசுத் துறைகள் மூலம், மக்களுக்குப் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.

இந்தச் சேவைகளைப் பெறுவதில் அடித்தட்டு மக்கள் சில சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று அரசுக்குத் தெரிய வந்தது. இந்தச் சேவைகளை இணைய தளங்களில் பதிவேற்றம் செய்வதில், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மக்களுக்குச் சில சிரமங்கள் இருந்தது. இந்த சிரமங்களை போக்கி; மக்களுக்கு உதவுகிற வகையில் உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு புதிய திட்டமாகத்தான், இந்த “மக்களுடன் முதல்வர்” திட்டம், முதல்வரின் முகவரித் துறையால் இன்றைக்கு தொடங்கி வைக்கப்படுகிறது. அரசினுடைய சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, அனைத்து பொதுமக்களுக்கும், அனைத்து சேவைகளும் எளிதாக கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அதாவது, செயல்முறையை விரைவுபடுத்துவது, தாமதங்களை குறைப்பது, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைக் குறைப்பது என்று விரைவாகவும், எளிதாகவும் சேவைகளை வழங்குகின்ற நோக்கத்தில்தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள், முதியோர் போன்றவர்களின் சிரமங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அதையெல்லாம் தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் தனிக்கவனம் செலுத்தும். அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களையும் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கின்றோம். இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எல்லோரும் ஒரே குடையின்கீழ் கூடி, மக்களுடைய கோரிக்கைகளை பெற்று பதிவு செய்வார்கள்.

முகாம்களில் பெறப்படுகின்ற மனுக்கள் எல்லாம், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள்ளாக உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். இந்த முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.முதல் கட்டமாக, புயல் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் இருக்கின்ற அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கின்ற கிராம ஊராட்சிகளிலும் ஏறத்தாழ 1745 முகாம்கள் நடத்தப்படும்.

இப்போது கோவையில், நான் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கின்ற இதே சமயத்தில், அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த முகாம்களை தொடங்கி வைக்கிறார்கள்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவித்தொகை வழங்குவது முடிந்ததும், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31-ம் தேதி வரைக்கும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றது. இந்த முகாம்களில் பெறப்படுகின்ற அனைத்து கோரிக்கைகளும் அரசால் பரிசீலிக்கப்பட்டு, முறையான கோரிக்கையாக இருந்தால் நிறைவேற்றித் தரப்படும் என்று இங்கே நான் உறுதி அளிக்கின்றேன். பொதுமக்கள் கொடுக்கின்ற கோரிக்கைகள் அனைத்தும் 'மக்களுடன் முதல்வர்' இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தொடர்புடைய துறை அலுவலர்கள் சேவை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் முகாம்களிலேயே பெற்று பரிசீலிப்பார்கள்.

அனைத்து முகாம்களிலும், “தமிழ்நாடு மின் ஆளுமை முகமை” மூலம் இ-சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாம்களை நல்ல முறையில் பயன்படுத்தி, உரிய சேவைகளை பெற்றுப் பயனடைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தொடர்புடைய அரசு துறை அலுவலர்களுக்கு உங்கள் முதல்வர் அன்போடு கூறிக் கொள்வது, மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பது என்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம், அதுதான் உண்மை என்று செயல்பட்டாகவேண்டும். அரசு மேல் ஏழைகள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைகள் வலுவடையும்.

கண்களில் கண்ணீரோடும், வாடிய முகத்தோடும், ஆனால், இதயத்தில் நம்பிக்கையோடும், தலைமைச் செயலகத்தில் வரிசையாக, பொறுமையாக நின்று மனு கொடுக்கின்ற மக்களை இப்போதும் அவர்களை பார்க்க முடிகிறது. பொதுமக்கள் கோட்டையை நோக்கி இப்படி வருவதை மாவட்ட ஆட்சியர்களும், மற்றும் மாவட்ட அலுவலர்களும் குறைக்கவேண்டும்; வட்ட அளவில் முடிய வேண்டியதை, வட்ட அளவிலும், மாவட்டத்தில் முடிய வேண்டியதை மாவட்ட அளவிலும், முடித்து வைக்க போதிய முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

நம்மை நாடி வருகின்ற பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு, அவர்கள் குறைகளை களைய முழு ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றவேண்டும் என்று அனைத்து துறை அரசு அலுவலர்களையும் அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் வழங்குகின்ற விண்ணப்பங்களுக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில், தற்காலிகமாக, பயனில்லாத பதில்களை கொடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.'காரணம் சொல்பவர், காரியம் செய்ய மாட்டார்' என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்று. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கோரிக்கை மனுக்களை தட்டிக் கழித்துவிடக் கூடாது. மக்களுக்கு நம்பிக்கை என்பது அரசாங்கம்தான். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மக்கள் சேவகர்களான நமக்குத்தான் இருக்கிறது.

“மக்களுடன் முதல்வர்” திட்டம் ஒரு சிறப்புத் திட்டம். பெறப்படும் விண்ணப்பங்களை சரியாக பரிசீலனை செய்து, பயனுள்ள வகையில், இறுதியான பதில்களை வழங்கவேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களையும், மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொண்டு, “மக்களுடன் முதல்வர்” திட்டம் முழுமையான வெற்றி பெறவேண்டும்.“மக்களுடன் முதல்வர்” திட்ட தொடக்க விழாவுக்காக கோவை வந்திருக்கின்ற எனக்கு கோவைக்கான சிறப்புத் திட்டங்களையும் தொடங்கி வைக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இந்த விழாவில், “செம்மொழிப் பூங்கா” அமைக்க கால்கோள் (அடிக்கல்) நாட்டப்பட்டிருக்கிறது.

2010-ம் ஆண்டு ஜூன் 23 முதல் 27-ஆம் நாள் வரை கோவை மாநகரில் மறைந்தவ முதல்வர் கருணாநிதியால் தமிழக அரசின் சார்பில், “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் 27-6-2010 அன்று நிறைவுரை ஆற்றிய கருணாநிதி 15 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான், கோவை காந்திபுரம் அருகில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் என்பது.தாவரவியல் தோட்டத்தை பின்புலமாக வைத்து இந்தப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் இயற்கையை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் ஏற்ற வகையில், தாவர இனங்கள் நிலைக்கத்தக்க வகையில், நீலகிரி உயிர்கோளப் படுகையில் இருக்கின்ற அரிய வகை தாவர இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் ஆளுமையை மேம்படுத்தும் நோக்கில், செம்மொழிப் பூங்கா கோவையில் அமைக்கப்படுகிறது.

இத்துடன் முதல்கட்டமாக, 45 ஏக்கர் நிலப்பரப்பிலும், இரண்டாவது கட்டமாக, 120 ஏக்கர் நிலப்பரப்பிலும், இந்தச் செம்மொழிப் பூங்கா அமைய இருக்கிறது. இந்தப் பூங்கா 133 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் இந்தியாவிலேயே தனித்துவத்துடன் பல சிறப்புகளை உள்ளடக்கியிருக்கும்.இந்தப் பூங்காவில்‘செம்மொழி வனம்’,‘மகரந்த வனம்’,‘மூலிகை வனம்’,‘நட்சத்திர வனம்’,‘நறுமண வனம்’ போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்படும். இப்படியொரு சிறப்புவாய்ந்த திட்டத்துக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டியதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னையில் கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஜல்லிகட்டு அரங்கம், சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம், சேலத்தில் டைடல் பார்க்கும், ஜவுளிப் பூங்கா, திருச்சியில் விளையாட்டு நகரம், தஞ்சை, வேலூர், சேலம், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க்குகள், திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம், தூத்துக்குடியில் பன்னாட்டு அறைக்கலன் பூங்கா, இந்த வரிசையில், கோவைக்கு செம்மொழிப் பூங்கா இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறோம். அண்ணா வழியில், கருணாநிதி வழியில், முதல்வர் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கின்ற தமிழக மக்களுக்காக உழைப்பதையே குறிக்கோளாக கொண்டு நான் உழைத்துக் கொண்டு வருகிறேன்.

“மக்களுடன் முதல்வர்” போன்ற திட்டங்கள் மூலமாக அரசுக்கும், மக்களுக்குமான நெருக்கம் அதிகமாகின்றது. அரசு வேறு, மக்கள் வேறு அல்ல என்பதை உணர்த்தும் திட்டம்தான் இது. இது போன்ற திட்டங்கள் மூலமாக மக்களும், மாநிலமும் சேர்ந்து வளரும். தமிழகத்தை, இந்தியாவில் சிறந்த மாநிலமாக மட்டும் இல்லை, உலகமே வியந்து பார்க்கின்ற மாநிலமாக உருவாக்குகின்ற இலக்கை எனக்கு நானே உருவாக்கிக் கொண்டு உழைத்து வருகிறேன். இந்தக் காட்சியை நாம் விரைவில் காண்போம் என்பது உறுதி என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x