Published : 18 Dec 2023 01:51 PM
Last Updated : 18 Dec 2023 01:51 PM

தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் | உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவித்தது தமிழக அரசு

தென் மாவட்டங்களில் கனமழை | உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்கள், தங்களுக்குத் தேவையான உதவிகளைக் கோரும் வகையிலும், பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் வகையிலும் ‘வாட்ஸ்அப்’ எண் மற்றும் ‘ட்விட்டர்’ (எக்ஸ்) கணக்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி. கன்னியாகுமரி. தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

எனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொது மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள். மீட்பு நடவடிக்கைகள் முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப்எண் : 8148539914 மற்றும் ட்விட்டர் மூலமாக தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்க:

வாட்ஸ்அப்எண்: 8148539914
ட்விட்டர் Username - @tn_rescuerelief, @tnsdma
பேஸ்புக் ஐடி: @tnsdma

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x