Published : 17 Dec 2023 09:58 AM
Last Updated : 17 Dec 2023 09:58 AM

ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம்: வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (டிச.17) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் டிச.9 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000 நிவாரணத் தொகை இன்று முதல் ரொக்கமாக வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுவர். இதற்கென தமிழக அரசால் 1486 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிவாரணத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக முதல்வர் வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடை அருகில் ரூ.6000 நிவாரணத் தொகையினை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிவாரணத் தொகையை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

வெள்ள நிவாரணத் தொகை ரூ.6000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். வெள்ள நிவாரணத் தொகை விநியோகம் தினசரி காலை 9 மணி முதல் 1 மணி வரையும் மதியம் 3 மணி முதல் 5 வரை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை வழங்கப் படுவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

முன்னதாக, தமிழக முதல்வர் நிவாரணத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தப் பின்னர், நியாய விலைக் கடை அருகில் உள்ள குறைதீர் விண்ணப்பங்கள் பெறுதல் மையம் மற்றும் உதவி மையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசன் மௌலானா, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் ஹர் சஹாய் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் ரூ.6,000? - முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.6,000 உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு 100 சதவீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பாதிப்புகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.

வருமான வரி செலுத்துவோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வருமான வரி செலுத்துவோரும், பாதிப்பு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, சர்க்கரை அட்டை வைத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, சர்க்கரை அட்டையாக இருந்தாலும், வருமான வரி கட்டுபவராக இருந்தாலும் பாதிப்பு கூடுதலாக இருக்கும் விவரத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடைகளில் கொடுத்தால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல, வருமான வரி செலுத்தக் கூடிய, உயர் வருவாய் பிரிவினர் நிவாரணம் கோரி விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

உயிரிழப்புகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கவும், கால்நடைகள் பாதிப்பு, படகுகள் சேதம் ஆகியவற்றுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்றார்.

இதனிடையே, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை விடுத்தார். மத்திய குழுவினர் வந்து பார்வையிட்ட நிலையில், தற்காலிக நிவாரணமாக ரூ. 7,033 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x