Published : 17 Dec 2023 05:34 AM
Last Updated : 17 Dec 2023 05:34 AM

தமிழகத்தில் 'கரோனா' பரிசோதனை அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், 8-வது வாரமாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றும் முகாம்கள் நடைபெற்றன. சென்னை அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடிசாலை, சசி நகரில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழைக்கால மருத்துவ முகாம்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை உள்ளசிறார்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியும் நடைபெறுகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு உள்ளான பகுதிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.

பிளீச்சிங் பவுடர்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைத்தளத்தில் உள்ளகுடிநீர் தொட்டிகளை பிளிச்சிங்பவுடர் பயன்படுத்தி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக, சென்னை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்குள்ளான 4 மாவட்டங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை கிலோ பிளீச்சிங் பவுடர் கொடுக்கப்படுகிறது.

கேரளாவில் கரோனா தொற்றுபாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகி விடுகின்றனர். தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 4 மாதங்களாக குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதுபோன்ற பதற்றமான சூழல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x