Published : 13 Dec 2023 12:41 PM
Last Updated : 13 Dec 2023 12:41 PM

“ஸ்ரீரங்கம் சம்பவத்துக்கு அரசியல் சாயம்” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம்

சென்னை: "எங்காவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அரசியல் சாயம் பூசுவதுதான் அண்ணாமலையின் வாடிக்கை. சென்னையில் பெய்த பெருமழையை வைத்து அரசியல் செய்ய நினைத்தார்கள், இரண்டு நாட்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதில் எந்த அரசியலும் செய்ய முடியவில்லை என்பதற்காக, தற்போது பழைய பல்லவியை புது மெட்டில் பாட ஆரம்பித்துள்ளனர்" என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஸ்ரீரங்கம் சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எதற்கு எடுத்தாலும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் இருக்கும். காமாலைப் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், எங்கேயாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும் பிரச்சினைக்கும் அரசியல் சாயம் பூசுவதுதான் அவர்களுடைய வாடிக்கை. ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடந்த பிரச்சினை என்பது, பக்தர்களுக்கும் கோயிலில் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்.

பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் இவர்களுடன் சேர்ந்து அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி சுமுகமான ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்றே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், எதுவும் கிடைக்காதவர்கள், ஏதாவது கிடைத்தால் ஊதி ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், சென்னையில் பெய்த பெருமழையை வைத்து அரசியல் செய்தார்கள். ஆனால், சென்னையில் இரண்டு நாட்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்பியது. இதில் எந்த அரசியலும் செய்ய முடியவில்லை என்பதற்காக, தற்போது பழைய பல்லவியை புது மெட்டில் பாட ஆரம்பித்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு பெருமாளை வழிபட வரிசையில் காத்திருந்தனர். விஸ்வரூப தரிசனத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் முதல் பக்தர்கள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, சேவைக்காக மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள காயத்ரி மண்டபத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் தங்களை விரைந்து சேவைக்கு அனுமதிக்கும்படி அங்கிருந்த உண்டியலைத் தட்டி கோஷமிட்டுள்ளனர். இதை அங்கு காவல் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தட்டிக் கேட்டபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆந்திர ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் காயத்ரி மண்டபத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை. 42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட சென்றுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, சிலரை மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதித்துள்ளனர். இதனால் நீண்டநேரம் காத்திருந்த பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், கோயில் வளாகத்துக்குள் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என பாஜக கூறுவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்" என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x