Published : 12 Dec 2023 11:08 AM
Last Updated : 12 Dec 2023 11:08 AM

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புக்கு விரிவான திட்ட அறிக்கை தயார்: திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்

திமுக. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு

புதுடெல்லி: ”தமிழ்நாட்டுக்குள் ஓடும் ஆறுகளான காவிரி (கட்டளை) - வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்துக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. அடுத்தகட்ட பணிகள் இனிமேல் தொடங்கப்பட வேண்டும்” என திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது,

உள்நாட்டு ஆறுகள் மற்றும் மாநிலத்துக்குள்ளேயே பாயும் ஆறுகளை இணைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி மாநிலங்களவையில் திமுக. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் டுடு அளித்த பதில்: ஆறுகளுக்கிடையே நீரைப் பரிமாறும் வகையில் 1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின்படி தேசிய நீர்வள அமைப்பு 16 தீபகற்ப ஆறுகள் மற்றும் 14 இமாலயப் பிரதேச ஆறுகளை ஒன்றுக்கொன்று இணைக்கும் சாத்தியக் கூறுகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க முடிவெடுத்தது.

இதில் மொத்தமுள்ள 30 இணைப்புகளுக்கும் முன் சாத்தியக்கூறு அறிக்கைகளும், 24 இணைப்புகளுக்கு சாத்தியக் கூறு அறிக்கைகளும், 11 இணைப்புகளுக்கு விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பேச்சுவார்த்தைகள் மற்றும் விரிவான கலந்தாலோசனைகள் மூலம் ஆறுகளை இணைப்பதற்கு மத்திய அரசு உச்சபட்ச முன்னுரிமையை அளித்து வருகிறது. இதற்காக 2014ல் ஒரு சிறப்புக் குழுவும், 2015 ஒரு செயல்திட்டக் குழுவும் தனித்தனியே அமைக்கப்பட்டு, இதுவரை சுமார் 20 கூட்டங்களை அவை நடத்தியுள்ளன.

திட்டமிட்டபடி இந்த முப்பது திட்டங்களும் அமலாகி சம்பந்தப்பட்ட ஆறுகள் இணைக்கப்பட்டால் இரண்டரை கோடி ஹெக்டேர் நிலத்தில் ஆற்றுப் பாசனம் மூலமாகவும், ஒரு கோடி ஹெக்டேர் நிலத்தில் நிலத்தடி நீர் உயர்வதன் மூலம் பாசனம் செய்வதன் மூலமும் விவசாயம் செய்ய முடியும். இதுதவிர 34 மில்லியன் கிலோ வாட் அளவுக்கு நீர் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

அதுமட்டுமின்றி, இந்த ஆறுகள் இணைப்பின் மூலம் வெள்ளத் தடுப்பு, மீன் வளர்ச்சி, சுற்றுச் சூழல் மாசடையாமல் காப்பது, வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

இந்தத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்தினால் 166 பில்லியன் கன அடி நீரை தேவையான இடங்களுக்கு மடைமாற்ற முடியும். 2015-16 ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்படி இந்தத் திட்டங்களை செயல்படுத்த 8.45 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கை தயாரான 16 திட்டங்கள் மூன்று தமிழ்நாட்டோடு தொடர்புடையவை. முதலாவது, பெண்ணாறு (சோமசீலா) – காவிரி (கிராண்ட் அநைக்கட்டு) இணைப்புத் திட்டம். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது, பம்பை – அச்சன்கோவில் – வைப்பாறு ஆறுகளை இணைக்கும் திட்டம். இதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாராகி இருக்கிறது.

மூன்றாவது தமிழ்நாட்டுக்குள் ஓடும் ஆறுகளான காவிரி (கட்டளை) - வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது. அடுத்தகட்ட பணிகள் இனிமேல் தொடங்கப்பட வேண்டும்.

ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்காக சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரிப்பது உள்ளிட்ட முதற்கட்டப் பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 350 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பிஷ்வேஸ்வர் டுடு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x