Published : 08 Dec 2023 11:26 AM
Last Updated : 08 Dec 2023 11:26 AM

தமிழகத்தில் யூரியா, டிஏபி உள்ளிட்ட அனைத்து உரங்களும் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் யூரியா, டிஏபி உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

பாமக நிறுவனர் இராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் சம்பா மற்றும் தாளடி நடவு தீவிரமடைந்திருக்கும் நிலையில், அடியுரமாகவும், மேலுரமாகவும் பயன்படுத்துவதற்கு தேவையான யூரியா , டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தனியார் உரக்கடைகளில் தொடங்கி, கூட்டுறவு சங்கங்கள் வரை எங்கும் உரங்கள் கிடைக்கவில்லை. அதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யுமா? என்ற ஐயத்தாலும் நடப்பாண்டில் மிகவும் தாமதமாகத் தான் சம்பா, தாளடி நடவுப் பணிகளை காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் தொடங்கினார்கள். இன்னும் பல்லாயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் உரத்தட்டுப்பாடு போக்கப்படவில்லை என்றால், சம்பா, தாளடி சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து விடும் ஆபத்து உள்ளது. சம்பா, தாளடி நடவு தாமதமானால், நெற்பயிர்கள் கதிர் விடும் காலத்தில் போதிய தண்ணீர் கிடைக்காது என்பதால் அவற்றின் மகசூல் பாதிக்கப்படும். அதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

நடப்பாண்டில் மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பா மற்றும் தாளடி நடவு தொடங்குவதற்கு முன்பாக டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக வினியோகிக்கப்படும் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் இதுவரை விற்பனைக்காக சந்தைக்கு வராதது தான் இத்தகைய தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி. பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாகியும் உரத்தட்டுப்பாடு தீர்க்கப்படாதது வருத்தமளிக்கிறது.

நடப்பு பருவத்திற்கான உர மானியத்திற்கு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதியே மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து விட்டது. அதன்பிறகும் உரங்கள் போதிய அளவில் சந்தைக்கு வராமல் இருக்க நியாயமான காரணங்கள் இல்லை. டி.ஏ.பி. உரங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம். காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் தமிழக அரசு பேச்சு நடத்தி, டிஏபி, யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x