Published : 01 Dec 2023 04:16 AM
Last Updated : 01 Dec 2023 04:16 AM

விக்கிரவாண்டி அருகே போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்: கிராம மக்கள் முற்றுகை

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்கக்கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட வாக்கூர் கிராம மக்கள்.

விழுப்புரம்: போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாக்கூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு வரைசுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 3 மற்றும் 4-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் கருணாகரன் என்பவர் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு அண்மையில் தொலைபேசி மூலம் புகார்கள் வந்தன.

ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் இப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப் பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் கருணாகரன் தங்களின் கன்னத்தில் முத்தமிட்டதாகவும், இடுப்பில் கிள்ளியதாகவும் மாணவிகள் சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நன்னடத்தை அலுவலர் நெப்போலியன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் கருணாகரனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் கருணாகரனை நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி அலுவலர் கவுசர் உத்தரவிட்டார்.

இதனிடையே ஆசிரியர் கருணாகரனுக்கு ஆதரவாக கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பள்ளி முன்பாக திரண்டனர். அவர் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் முற்றுகையிட்டனர். ஆசிரியர் கருணாகரனை விடுவிக்கக்கோரி முழக்கமிட்டனர்.

இதை தொடர்ந்து குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்த மனுவில், ஆசிரியர் கருணாகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, "இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்துக்கு புகார் செல்லும் வரையில் ஏன் பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர், தலைமை ஆசிரியர் புஷ்பராணி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x