Published : 26 Nov 2023 04:10 PM
Last Updated : 26 Nov 2023 04:10 PM

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கார்த்திகை தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்தனர்.

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலையில் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவ.18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பூதம், அன்னம், காமதேனு, சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். அதனையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக எட்டாம் நாளான நேற்று மாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து 9-ம் திருவிழாவான இன்று காலையில் சிறிய வைரத் தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை 7.15 மணியளவில் சர்வ அலங்காரத்தில் புறப்பட்டார். பின்னர் 16 கால் மண்டபம் முன்பு சிறிய வைரத்தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலை 7.40 மணியளவில் நிலையிலிருந்து புறப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக தேர் காலை 8.45 மணியளவில் நிலையை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் 6 மணியளவில் கோயில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்படும். அதன் பின்னர் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x