Published : 25 Nov 2023 12:42 PM
Last Updated : 25 Nov 2023 12:42 PM

“ஓமனில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்” - வைகோ கோரிக்கை

வைகோ

சென்னை: ஓமானில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து வெளிட்டிருக்கும் அறிக்கையில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பதினெட்டு மீனவர்கள், ஓமன் நாட்டைச் சேர்ந்த மசூரிடம் (தொடர்பு எண்: +96899330063) 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் முதல் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த 18 மீனவர்களும் ஓமானில் உள்ள DUQM துறைமுகத்தில் மசூருக்குச் சொந்தமான NOOH -1012 மற்றும் YAHYA -1184 ஆகிய இயந்திர படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.

மசூர் உரிய சம்பள பணத்தை மீனவர்களுக்கு வழங்காமலும், அவர்களைத் துன்புறுத்தியும் வந்துள்ளார். மேலும் மீனவர்களுக்கான சம்பள பாக்கியை மீனவர்களுடைய கேப்டன் பெத்தெலிஸ், மசூரிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு, நவம்பர் 15, 2023 அன்று, மசூரின் மேலாளர் தலைமையிலான குழுவினரால் பெத்தேலிஸ் அழைத்து செல்லப்பட்டு, சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பெத்தேலிஸ் எங்கே? என்று மீனவர்கள் கேட்டதற்கு, பெத்தேலிஸுக்கு என்ன ஆனதோ அது உங்களுக்கும் நடக்கும் என்று மசூர் மிரட்டியுள்ளார். இந்தச் சூழலில், இனி ஓமனில் பணிபுரிவது பாதுகாப்பு இல்லை என மீனவர்கள் கருதுகின்றனர். மீனவர்கள் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு மசூரிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களை இந்தியாவுக்குத் திரும்ப அனுமதிப்பதற்குப் பதிலாக, மீனவர்களுக்கு தண்ணீரும் உணவும் இல்லாமல் பட்டினி போட்டு இருக்கிறார் மசூர். எனவே, பெத்தேலிஸ் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்கப்படவும், ஓமானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவரவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x