Published : 25 Nov 2023 05:27 AM
Last Updated : 25 Nov 2023 05:27 AM

இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம்

கோப்புப் படம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள வாக்குசாவடிகளில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்.27-ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. பொதுமக்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும், நேரில் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களிடமும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், கடந்த நவ.3-ம் தேதி நிலவரப்படி, நேரிலும் ஆன்லைன் மூலமும் 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. குறிப்பாக, அதில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து 15,187 பேர் வழங்கியிருந்தனர். முகவரி மாற்றத்துக்கு 19,036 பேர் படிவம் 8-ஐ வழங்கியிருந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பொதுமக்கள் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த நவ 4,5-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப பெற்றனர். அந்த வகையில் 4 லட்சத்து 7,100 பெயர் சேர்க்க அளித்த படிவம் உட்பட 6 லட்சத்து 112 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து, நவ.18,19 ஆகிய இரு தினங்களும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நவ.18-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் மற்றும் பள்ளி வேலைநாள் அறிவிக்கப்பட்டிருந்ததால், நவ.25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள 31 ஆயிரம் வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தி.மலைக்கு தேதி மாற்றம்: இதனிடேயே நேற்று வரை 6, லட்சத்து 13,404 பெயர் சேர்த்தல் விண்ணப்பம் உட்பட 10 லட்சத்து 45,969 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த சிறப்பு முகாம், டிச.2 மற்றும் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் உள்ள வடக்கு, தெற்கு, மத்திய தொகுதிகளுக்கு அந்தந்த மாநகராட்சி மண்டல துணை ஆணையர்களும், ஆரணி தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அதிகாரியும், பொள்ளாச்சி தொகுதிக்கு கோவை மாவட்ட வருவாய் அதிகாரியும் மற்ற தொகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளையும் நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலை, தமிழக அரசிதழில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவிக்கை செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x