Published : 24 Nov 2023 11:48 AM
Last Updated : 24 Nov 2023 11:48 AM

கனமழையால் தண்ணீர் தேங்கியதால் நெல்லை - தென்காசி சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு

திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலையில் ஆலங்குளம் பகுதியில் கனமழையால் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் தடுமாற்றத்துடன் கடந்து செல்லும் வாகனங்கள்.

தென்காசி: திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலையில் ஆலங்குளம் பகுதியில் கனமழையால் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் நேற்று பகல் முழுக்க இந்த வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன. பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி- தென்காசி இடையே பிரதான சாலையை நான்கு வழிச்சாலையாக விரிபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் சாலைப் பணி நடைபெறும் இடத்தில் உள்ள பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. தண்ணீரை வடியவைக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் நேற்று காலையிலிருந்தே இந்த வழியாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்பகுதியை கடக்க வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க நேரிட்டது. இந்நிலையில் நேற்று மாலையில் ஜேசிபி மூலம் சாலையை தோண்டி, குழாய் அமைத்து தண்ணீரை மறுபுறம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பணியால் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை வாகனங்கள் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தென்காசி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்த ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதனால் அதிலிருந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இது போல் பேருந்துகளில் காத்திருந்த பயணிகளும் அவதியுற்றனர். போக்குவரத்து பிரச்சினை குறித்து தெரிய வந்த பின்னரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாற்றுப் பாதையில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்காமலும், சாலையில் தேங்கிய தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனமாக செயல்பட்டது வாகன ஓட்டிகளையும், பயணிகளையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x