Published : 17 Nov 2023 03:03 PM
Last Updated : 17 Nov 2023 03:03 PM

‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தக தடைக்கு எதிரான வழக்கில் மனுதாரர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள ‘ரிட்’ வழக்கு விசாரணைக்கு உகந்ததா என விளக்கமளிக்க, புத்தகத்தின் ஆசிரியர் குழந்தை ராயப்பன் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ‘இந்தப் புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக உள்ளது. பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் சாதியவாதத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் உள்ளது’ என இந்தப் புத்தகங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார் .

அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் ஒரு சமூக ஆர்வலர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல புத்தகங்களை எழுதியுள்ளேன். நான் எழுதிய ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகம் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதப்பட்டது. சாதி ரீதியாக எதுவும் இல்லை. இந்தப் புத்தகம் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்ற புத்தகம். தன்னிடம் உரிய விளக்கம் கேட்கப்படாமல் இந்தப் புத்தகத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96-வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன் மற்றும் தனபால் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு முழு அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கடந்த 2013-ல் புத்தகம் வெளியிடப்பட்டபோது, பொது ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் இல்லை. 2000 புத்தகங்கள் விற்கப்பட்ட நிலையில், தடை குறித்து புத்தக ஆசிரியருக்கு அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. பறிமுதல் தொடர்பாகவும் எந்த நோட்டீஸும் அளிக்கவில்லை" என வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில், "குற்ற விசாரணை முறைச் சட்டம் 95-வது பிரிவின் கீழ், புத்தகத்தை தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, குற்ற விசாரணை முறைச் சட்டம் 96-வது பிரிவின் கீழ் 2 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 226-வது பிரிவின் கீழ் ரிட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரிட் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்புகளுடன் விளக்கமளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x