Published : 15 Nov 2023 12:10 PM
Last Updated : 15 Nov 2023 12:10 PM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா சென்னையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 102.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.

முன்னதாக, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர். ஆனால், சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் உயிர் பிரிந்தது.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வருடன் வந்திருந்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சங்கரய்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குரோம்பேட்டை மற்றும் தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சங்கரய்யாவின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x