Published : 06 Nov 2023 04:00 AM
Last Updated : 06 Nov 2023 04:00 AM

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை

பிரதிநிதித்துவப் படம்

வேலூர் / திருப்பத்தூர்: வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. வேலூரில் மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமான மழையாக பெய்த நிலையில் நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது.

இடி, மின்னல், காற்றுடன் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சனிக்கிழமை மாலை தொடங்கிய மழை ஞாயிற்றுக் கிழமையான நேற்று காலை விடியும் வரை தொடர்ந்தது. வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, கிரீன் சர்க்கிள் பகுதியில் நான்கு புறமும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, கந்திலி போன்ற பகுதிகளில் விடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இதனால், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலை, திருப்பத்தூர் - சேலம் பிரதான சாலை, திருப்பத்தூர் - தி.மலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பத்தூர், நாட்றாம் பள்ளி போன்ற பகுதிகளில் சாலையோரம் இருந்த பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. நேற்று காலை நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சம் பேரணாம்பட்டில் 88 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வேலூரில் 39.90, காட் பாடியில் 62, மேல் ஆலத்தூரில் 41.40, கே.வி.குப்பத்தில் 48.20, குடியாத்தத்தில் 85, ஒடுகத் தூரில் 73 என மொத்தம் 526.10 மி.மீட்டரும், சராசரியாக 40.47 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி திருப்பத்தூர் 12.80, ஆம்பூர் 68.60, வடபுதுப்பட்டு 38.60, ஆலங்காயம் 7.40, வாணியம்பாடி 23, நாட்றாம்பள்ளி 3.20, கேத்தாண்டப்பட்டி 16 என மொத்தம் 169.60 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x