Published : 01 Nov 2023 06:14 PM
Last Updated : 01 Nov 2023 06:14 PM

‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு’ - தமிழக அரசு சார்பில் சிறப்பு மலர் வெளியீடு

"விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" என்ற சிறப்பு மலரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை: “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தச் சிறப்பு மலர்களை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.1) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை வெளியிட, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று முதன்முதலாக 15.08.2021 அன்று சுதந்திரத் திருநாளன்று சென்னை தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆற்றிய உரையின்போது, இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அளித்த பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தயாரித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடும் என்று அறிவித்தார்.

அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டு தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்தும் வகையிலும், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்த ஆவணத்தினை தயார்செய்ய, சென்னை லயோலா கல்லூரி முன்னாள் தலைவர் பெர்னாட் டி சாமி தலைமையில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் வரலாற்றுப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, தமிழ்நாடு பாடநூல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு ஆவண காப்பக ஆய்வு அதிகாரி விஜயராஜா ஆகியோர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாகவும்;

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் என். தனலட்சுமி, ஸ்டெல்லா மேரி கல்லூரி உதவிப் பேராசிரியர் சிந்தியா ஜுட், லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியர் ஏ. அற்புதச் செல்வி, லயோலா கல்லூரி இணைப் பேராசிரியர் எல். செல்வநாதன், லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியர் சேவியர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கே. அசோக், ராஜபாளையம், ராஜுஸ் கல்லூரி முன்னாள் முதல்வர் வி. வெங்கட்ராமன், அழகப்பா கல்லூரி உதவிப் பேராசிரியர் டி. பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மெய்நிகர் பல்கலைக்கழக ஆய்வாளர் செந்தில் குமரன் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (வெளியீடுகள்) இரா. அண்ணா ஆகிய பிற உறுப்பினர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, இச்சிறப்பு மலர் தயார் செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு மலரில், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சி. நடராஜன் எழுதிய “தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் சுருக்கமான வரலாறு”, பஞ்சாப் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் வெங்கட சுப்பிரமணியன் எழுதிய “இந்திய தேசிய வாதமும், சங்கத் தமிழ் இலக்கியமும்”, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு ஆய்வு மையத்தைச் சேர்ந்த வேலாயுதம் சரவணன் மற்றும் வீரமணி எழுதிய “தமிழ்நாட்டில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஓர் ஆய்வு செய்யப்படாத வரலாறு”, ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி இணைப் பேராசிரியர் கே. ராஜேஷ் குமார் எழுதிய “தமிழ்நாட்டில் விவசாயிகள் எழுச்சி (1920-1947)”, சிக்கிம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் வி. கிருஷ்ணா ஆனந்த் எழுதிய “தேசிய வாதமும் தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமும்”, எழுத்தாளர் டாக்டர் தியோடர் பாஸ்கரன் எழுதிய “சுதந்திரப் போராட்டமும், தமிழ்நாட்டின் வெள்ளித்திரையும்”, சென்னை தியாகராய கல்லூரி முன்னாள் தலைவர் எஸ்.என். நாகேஸ்வரராவ் எழுதிய “இந்தியாவுடன் இணைதல்; புலம்பெயர் தமிழர்களும் இந்திய சுதந்திரப் போராட்டமும்”, ராணிப்பேட்டை அப்துல் ஹக்கிம் கல்லூரி உதவிப் பேராசிரியர் முகமது ஹாசன் எழுதிய “அரசியல் உரை மற்றும் தேசியவாத கதைகள்; காலனித்துவ தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள்”;

ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் வி. வெங்கட்ராமன் எழுதிய “பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ், கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் இறக்குமதி; காலனித்துவ தமிழ்நாட்டில் பொதுவுடைமைவாதிகளின் எழுத்துக்களுக்கான முக்கிய மேடை (1925-1945)”, பிஹார் பாபா சாஹேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் சந்திரா எழுதிய “காலனித்துவ மதராசில் கல்வி, வேலையின்மை மற்றும் சுதந்திரப் போராட்டம்”, ஸ்டெல்லா மேரி கல்லூரி உதவிப் பேராசிரியர் சிந்தியா ஜுட் எழுதிய “மாணவர் இயக்கங்களும் சுதந்திரப் போராட்டமும்-1”, ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி உதவிப் பேராசிரியர் டி. எபிஜேம்ஸ் எழுதிய “மாணவர் இயக்கங்கள் மற்றும் சுதந்திரப் போராட்டம் -2”;

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் எம். ஆரோக்கிய சாமி சேவியர் எழுதிய “சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டு கிறிஸ்தவர்களின் பங்களிப்புகள்”, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமுது கல்லூரி இயக்குநர் ஜே. ராஜாமுகமது எழுதிய “சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்புகள்”, ராஜபாளையம் ராஜுஸ் கல்லூரி முன்னாள் முதல்வர் வி. வெங்கட்ராமன் எழுதிய “தமிழ்நாடு சட்டமறுப்பு இயக்கத்தில் ஐரோப்பிய மேட்டுக்குடியினரின் காந்திய ஆதரவு அணுகுமுறை (1930-1932)”, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கே. அசோக், பி. சுமபாலா மற்றும் டாக்டர் எஸ். தீபிகா ஆகியோர் எழுதிய “தியாகத்தின் அடையாளங்கள்; தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள்”, பாண்டிச்சேரி மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் எம்.பி. ராமானுஜம் எழுதிய “இந்திய தேசிய வாதமும், புதுச்சேரியின் விடுதலையும்” ஆகிய கட்டுரைகள் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்சியில் கடந்த அக்.23-ம் தேதியன்று நடந்த மருது சகோதரர்கள் நினைவு தினவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன், நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் பெயர் பட்டியலைத் தருமாறு தமிழக அரசிடம் கேட்டிருந்தேன். தமிழக அரசுத் தரப்பில் தன்னிடம் கொடுத்த அந்தப் பட்டயலில், 40 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. ஆனால், தான் மேற்கொண்ட முயற்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் இருந்து சுதந்திரப் போராட்டத்துக்காக போராடி இருப்பது தெரியவந்தது" என்று பேசியிருந்தார். இதற்கு தமிழக அரசுத் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x