Published : 01 Nov 2023 02:54 PM
Last Updated : 01 Nov 2023 02:54 PM

ஆளுநர் மீது சரமாரி தாக்கு: காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ரவி | கோப்புப் படங்கள்

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சங்கரய்யாவைப் பற்றி ஆளுநருக்கு தெரியாவிட்டாலும் கேட்டிருக்க வேண்டும். 9 ஆண்டு காலம் சிறையில் இருந்த சுதந்திர போராட்ட வீரரான ஒருவருக்கு, 102 வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் என்.சங்கரய்யாவுக்கு ஒரு கவுரவ டாக்டர் பட்டம், சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் அதற்கு செவி சாய்க்கவில்லை, மறுத்துவிட்டார்.

அவர் மறுத்தப் பிறகு, மீண்டும் ஒருமுறை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட், சென்ட்டில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தின் விதியே என்னவென்றால், "மேற்படி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டம்-1965, அத்தியாயம் 20, தொகுதி 1-ல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது". அதாவது சிண்டிகேட், செனட்டுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது.

தமிழக ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி குறித்து பேசுபவர்களை கண்டாலே ஆளுநருக்கு பிடிப்பதில்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்க ஆளுநர் மறுப்பதற்கான காரணம் என்ன? ஏன் வழங்கவில்லை என்று ஆளுநர் விளக்கத் தயாரா? எதுக்காக இதையெல்லாம் செய்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா நீண்ட காலம் இந்த மக்களுக்காக போராடிய ஒருவர். அவருக்கு முதன்முதலாக தகைசால் விருது வழங்கி சிறப்பித்தவர் தமிழக முதல்வர். அந்த விருதின்போது அவருக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் தொகையைக்கூட, அவர் பெற்றுக்கொள்ளவில்லை. இந்தத் தொகையில் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று கூறிய சங்கரய்யாவுக்கு, ஆளுநர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கிறார் என்றால், இவரை என்னவென்று கூறுவது?

திராவிட மாடல் அரசின் முதல்வர் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களு்க்கு மரியாதை கொடுக்கவில்லை என்று ஆளுநர் கூறுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் உதவுவதுதான் தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் ஆட்சி. நடிப்பு சுதேசிகளாக ஆளுநர் இருப்பது வருந்தத்தக்கது. சுதந்திப் போராட்ட தியாகிகள் மீது ஆளுநருக்கு அக்கறை இருந்தால் கொடுக்க வேண்டாமா? ஏன் கொடுக்கவில்லை?

இது தொடர்பாக இரண்டு முறை வேண்டுகோள் கொடுத்தேன். ஆனால், எதையும் அவர் செவிகளில் ஏற்கவில்லை. அது என்ன மாதிரியான செவியோ தெரியவில்லை. சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடைமைவாதியுமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க மறுக்கும் ஆளுநரைப் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எதிரான எதிரிகள் இருக்க முடியாது. காரணம், ஆளுநர் அந்த காலத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ்ஸில் இருந்தவர்.அவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேல் மதிப்பு கிடையாது. காந்தியடிகளையே வேண்டாம் என்று கூறியவர்கள். அந்த இயக்கத்தில் இருந்து வந்தவர் ஆளுநர். அதனால்தான் அந்த வெறித்தனத்தில் பேசுகிறார்.

ஆளுநரின் செயல்கள், பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால்தான், தினமும் பொய் சொல்வதையே தனது தொழிலாக கொண்டிருக்கிறார். எனவே, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, நாளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x