Published : 28 Oct 2023 06:08 PM
Last Updated : 28 Oct 2023 06:08 PM

தீபாவளி விடுமுறைக்கு 16,895 பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நவ.9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 09/11/2023 முதல் 11/11/2023 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 13/11/2023 முதல் 15/11/2023 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன், 3,167 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,467 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நவ.9 முதல் 11-ம் தேதி வரை சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விபரம்:

  • மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
  • கே.கே. நகர் மா.போ.கழக பேருந்து நிலையம்: ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
  • தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ): திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்
  • தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
  • பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம் (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்): வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.
  • புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம்,நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு)

2023 – தீபாவளி முன்பு - நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை:

  • நவம்பர் 9-ம் தேதி: தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், சென்னையிலிருந்து 1,365 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 1,100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
  • நவம்பர் 10-ம் தேதி: தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், சென்னையிலிருந்து 1,895 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 2,710 பேருந்துகளும் இயக்கப்படும்.
  • நவம்பர் 11-ம் தேதி: தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், சென்னையிலிருந்து 1,415 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 2,110 பேருந்துகளும் இயக்கப்படும். எனவே 3 நாட்களுக்கு வழக்கமான 6,300 பேருந்துகளுடன், 10,595 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 16,895 பேருந்துகள் இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு (Outer Ring Road) வழியாக வண்டலூர் சென்றடைந்து கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்: கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்ட சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள் நவ.9 - 11 (காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை): கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு வசதி: முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பின்பு - நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை (13.11.2023 முதல் 15.11.2023 வரை):

  • நவம்பர் 12-ம் தேதி: தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 1,275 சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
  • நவம்பர் 13-ம் தேதி: தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 975, சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,395 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
  • நவம்பர் 14-ம் தேதி: தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 917, சிறப்பு பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,180 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். வழக்கமான 6,300 பேருந்துகளுடன், 6,992 சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 13,292 பேருந்துகள் இயக்கப்படும்

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்:பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x