Published : 23 Oct 2023 04:29 PM
Last Updated : 23 Oct 2023 04:29 PM

இந்தியாவைப் பிரித்தாள ஆரிய - திராவிட பிரிவினையை பிரிட்டிஷார் உருவாக்கினர்: ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு தின விழாவில் உரையாற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சி: "உண்மையில் இங்கு ஆரியம் திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டாஷரின் உத்திகளில் இதுவும் ஒன்று. சுதந்திரப் போராட்டம் தொடங்கும் நேரத்தில் இதுபோன்ற கருத்தாக்கத்தை அவர்கள் பரப்பினார்கள்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,"தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான வரலாற்றை மறைத்து அதற்கு நிகரான வரலாற்றை எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள், தமிழகத்தில் இன ரீதியாக பிரிவினை இருப்பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள்.

திராவிடம் ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கினார்கள். திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை யார் என்று தெரியுமா? அவர்தான் ராபர்ட் கால்டுவெல். ராபர்ட் கால்டுவெல்தான், திராவிடர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார். உண்மையில் ராபர்ட் கால்டுவெல் யார் தெரியுமா? நான் இவர் போன்ற எண்ணற்ற மனிதர்களின் பின்னணி குறித்து லண்டன் சென்று படித்தேன்.

1813, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை உருவாக்கியது. அதுதான் இந்தியா சாட்டார்ட் சட்டம் (India Chattered Act) 1813. அச்சட்டத்தின்படி, இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசு மிஷினரிகளை அனுப்பியது. மிஷினரிகள் மூலம் இந்தியாவின் கலாச்சாரத் தூய்மையை அழிப்பதுதான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது. அதன் அடிப்படையில், மிஷினரிகளுக்கான தன்னார்வலர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பணிக்கு அங்குள்ள படித்தவர்கள் யாரும் வரவில்லை. காரணம், இதைவிட அங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு இருந்தது.

இதனால், பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த பணிகளுக்காக அங்கிருந்த கல்வியை பாதியிலேயே விட்டவர்களை தேர்வு செய்தது. அப்படி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களில் ஒருவர்தான் இந்த ராபர்ட் கால்டுவெல். பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத, கல்லூரிகளில் படிக்காத ராபர்ட் கால்டுவெல், இங்கு வந்தபிறகு, மொழியியல் நிபுணராக மாறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. திராவிட மொழிக்கான இலக்கணத்தை அவர் எழுதியிருக்கிறார். மேலும், திராவிடர்கள் தனி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டாஷரின் உத்திகளில் இதுவும் ஒன்று. சுதந்திரப் போராட்டம் தொடங்கும் நேரத்தில் இதுபோன்ற கருத்தாக்கத்தை அவர்கள் பரப்பினார்கள். அந்த சமயத்தில் அவர்களுடன் பணிபுரிபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவிகளை செய்தனர். இதனால், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் தோல்வியுற்று, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சி தொடர்ந்தது.

தமிழகத்தில் இன்றளவும் கொண்டாடப்படும் சிலர், லண்டனுக்கு சென்று பிரிட்டாஷரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. ஆனால், இதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ஆரிய, திராவிட பிரச்சினையின் காரணமாக, சுதந்திரப் போராட்டம் இயக்கம் பிளவுற்றது. ஆரியர்கள் ஆதிக்கம், வடஇந்திய ஆதிக்கம் என்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழகம் ஒரு புண்ணிய பூமி. சித்தர்களும், ரிஷிகளும் பிறந்த பூமி இது. ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கிய மண் இது. ஆனால், இங்கு பிரிட்டஷாரை கொண்டாடுகின்றனர்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x