Last Updated : 21 Oct, 2023 05:23 PM

 

Published : 21 Oct 2023 05:23 PM
Last Updated : 21 Oct 2023 05:23 PM

நமக்கு நாமே திட்டம் | புதுக்கோட்டையில் அலைக்கழிக்கும் அலுவலர்கள்: ஆதங்கத்தில் சேந்தன்குடி மக்கள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தில் ஸ்மார்ட் போர்டு பெறுவதற்கு பங்களிப்புத் தொகை செலுத்தியும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரக அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போர்டு பெறுவதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த ஜூன் மாதம் ரூ.33 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை எடுத்து ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பிறகு, 4 மாதங்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து இப்பணிகளை மேற்கொள்ளக் கூடிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் விசாரித்தபோது, அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் இருப்பது தெரியவந்தது. எனவே, இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் தங்க.கண்ணன் கூறியது: தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் உயர்நிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு பெறுவதற்காக ரூ.33 ஆயிரத்துக்கு ஜூன் 19-ம் தேதி வங்கி வரைவோலை எடுத்து ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது.

பின்னர், புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், பொதுப்பணித் துறை ஆகிய அலுவலகங்களுக்கு சென்று கடந்த சில நாட்களாக விசாரித்தோம். எந்த அலுவலகத்திலும் எங்களது விண்ணப்பம் இல்லை என்றார்கள். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது ஜூன் 24-ம் தேதியே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம் சென்று விளக்கிக் கூறியபிறகுதான் எங்களது விண்ணப்பம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, உத்தேச விலை பட்டியல் தேவை என்று தெரிவித்தனர். இதை, விண்ணப்பிக்கும்போதே கேட்டிருந்தால் கொடுத்திருப்போம். ஸ்மார்ட் போர்டும் வந்திருக்கும். எனவே, இனியும் தாமதிக்காமல் அரசுப் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, ‘‘இது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x