Published : 21 Oct 2023 05:27 AM
Last Updated : 21 Oct 2023 05:27 AM

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அக்.23-ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக வலுப்பெற்று, வரும் 22-ம் தேதி (நாளை) மாலை தீவிர புயலாக நிலவக்கூடும். பின்னர், வரும் 24-ம் தேதி தெற்கு ஓமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 23-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x